Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பயனாளிகளுக்கு, விரைவில் சம்பளம் வழங்கப்படும் என என்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் வெளியிட்ட அறிக்கையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், கிராமப்பகுதிகளில் பணியாற்றும் பயனாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம், ரூ. 2,963.40 கோடி கடந்த 3 மாதங்களாக மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கவில்லை.
அதனால் கிராமப்பகுதிகளில் உள்ள பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது, பண்டிகைக் காலம் வருவதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், கிராமப்பகுதிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை உடனடியாக வழங்கவேண்டும் என, மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம் கடிதம் அளித்துள்ளேன்.
மேலும், கடந்த, 31 ஆம் தேதி, ஊரக வளர்ச்சி துறை அரசு செயலாளரை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட சம்பள தொகை ரூ.2,963.40 கோடியை உடனடியாக வழங்கவேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
அதையடுத்து, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, ரூ. 2,963.40 கோடி நிலுவையை உடனடியாக வழங்குவதாக, மத்திய அரசின், ஊரக வளர்ச்சி துறை அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதையொட்டி சம்பள நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்துள்ளார்.